ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கூறுகையில், ‘‘கடந்த 1956ல் ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அதுமாதிரியான நடவடிக்கைகளை மோடி அமைச்சரவையில் எதிர்பார்க்க முடியாது. கொஞ்சமாவது அவமானகரமாக உணரும் பட்சத்தில், ரயில்வே அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என கூறி உள்ளார்.
இதே போல தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில்:
‘‘1956ல் ரயில் விபத்து நடந்த போது, லால் பகதூர் சாஸ்திரி பதவியை ராஜினாமா செய்தார். அப்போதைய பிரதமர் நேரு வேண்டாம் என மறுத்தும் கேட்காமல் சாஸ்திரி பதவி விலகினார்’’ என்றார். ‘‘ஒன்றிய அரசு சொகுசு ரயில்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. சாமானியர்களுக்கான ரயில் பாதைகள் புறக்கணிக்கப்படுகின்றன. அதன் விளைவுதான் ஒடிசா விபத்து’’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி பினோய் விஸ்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.