சென்னை: ‘ஆப்ரேஷன் சிந்துர்’ என்ற பெயரில் நமது ராணுவம் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். நமது நாட்டின் எல்லையையும், மக்களையும் காக்கும் போராட்டத்தில் நமது ராணுவத்திற்கு துணை நிற்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டி செயல்படும் தீவிரவாத முகாம்களின் மீது ‘ஆப்ரேஷன் சிந்துர் ‘ என்ற பெயரில் நமது ராணுவம் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது .
தீவிரவாதம் முற்றிலுமாக ஒழியும் வரை இந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும்.
இத்தாக்குதலை தலைமையேற்று நடத்திய கர்ணல் சோபியா குரேஷி, விங் கமெண்டர் வியோமிகா சிங் உள்ளிட்ட வீரப் பெண்மணிகளை நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது.
இதில் சோபியா குரேஷி ராணுவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது தந்தை ஒரு இமாம் ( மத போதகர் ) என்பதும் ஊடகங்களால் கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சிறப்புமிகு ராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகளின் உணர்வுகளோடு நாட்டு மக்கள் இரண்டற கலந்து நிற்கின்றனர்.
பொது மக்களுக்கு பாதிப்பின்றி, தீவிரவாதிகளை மட்டுமே குறி வைத்து தாக்கும் நடவடிக்கை என்பது ஒரு சிறந்த ராணுவ அணுகுமுறை என்பதில் ஐயமில்லை
நமது நாட்டின் எல்லையையும், மக்களையும் காக்கும் போராட்டத்தில் நமது ராணுவத்திற்கு துணை நிற்போம் என மனிதநேய ஜனநாயக கட்சி சூளுரைக்கிறது” என தெரிவித்துள்ளார்.