டெல்லி : தீவிரவாதத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் இந்தியாவின் உரிமையை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளதாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், இந்தியா குறித்து சர்வதேச அளவில் பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் மேற்கொண்டதை முறியடிக்கும் வகையில், அனைத்து கட்சிகள் அடங்கிய 7 குழுக்களை அமைத்த ஒன்றிய அரசு, 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பி உள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள இத்தாலி தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியான பலமான பதிலடியை இந்தியா கொடுத்துள்ளதாகவும் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த இத்தாலிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவிற்கு ஆதரவு பெருகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் பேசுகையில், “தீவிரவாத மையங்கள், ஏவுதளங்கள் மீது இந்தியா உறுதியான, துல்லியமாக பதிலடியை கொடுத்தது. தீவிரவாதத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் இந்தியாவின் உரிமையை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. இந்த உலகம் தீவிரவாதத்தை துளியும் சகித்துக் கொள்ளாது என நம்புகிறோம்.”இவ்வாறு தெரிவித்தார்.