ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மணிக்கல் பகுதி உள்ளது. இங்கு சோலூர் பேரூராட்சியின் கழிவு மேலாண்மைக்கூடம் உள்ளது. இங்கு ஏராளமான யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன. இந்த பகுதியில் நாள்தோறும் வாகனங்கள் சென்று வரும் நிலையில், அங்கு சென்று வரும் வாகனங்களுக்கு விபத்து அபாயம் ஏற்படும் நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து அந்த மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்த ஆபத்தான நிலையில் இருக்கும் அபாயகரமான யூகலிப்டஸ் மரங்களை வெட்டிக்கொள்ள மாவட்ட நிர்வாகத்திடம் சோலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. மணிக்கல் சாலையோரத்தில் உள்ள 40 ஆபத்து நிறைந்த மரங்களை வெட்டிக்கொள்ள மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிகிறது. ஆனால், அனுமதி வழங்கப்பட்ட 40 மரங்களுக்கு மேல் இப்பகுதியில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வருவாய் நிலம், முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டலத்திற்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்த 250 மரங்களை சட்டவிரோதமாக வெட்டிக் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு மரக்கடத்தலில் ஈடுபட்ட சோலூர் தட்டனேரி பகுதியை சேர்ந்த சண்முகவேல் (43), கோத்தகிரி நெடுகுளா பகுதியை சேர்ந்த பிரவித் குமார் (49) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.