Tuesday, July 8, 2025
Home செய்திகள் ஊட்டியில் தடையின்றி தண்ணீர் கிடைக்கும் பார்சன்ஸ்வேலி நீரேற்று மையத்திற்கு விரைவில் நிலத்தடி கேபிள் அமைப்பு

ஊட்டியில் தடையின்றி தண்ணீர் கிடைக்கும் பார்சன்ஸ்வேலி நீரேற்று மையத்திற்கு விரைவில் நிலத்தடி கேபிள் அமைப்பு

by Lakshmipathi

*நகராட்சி கூட்டத்தில் தகவல்

ஊட்டி : பார்சன்ஸ்வேலி நீரேற்று மையத்திற்கு நிலத்தடி கேபிள் அமைக்கப்பட்டு தங்கு தடையின்றி ஊட்டி நகரத்தில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஊட்டி நகராட்சி மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். துணை தலைவர் ரவிக்குமார் மற்றும் கமிஷனர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், துணை தலைவர் ரவிக்குமார் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யும் சமயங்களில் பார்சன்ஸ்வேலி பகுதிகளில் மரங்கள், மின் கம்பிகள் மீது விழுந்து மின் தடை ஏற்படுகிறது. இதனால் நகரின் தண்ணீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்னையை களைய பார்சன்ஸ்வேலி அணையில் உள்ள நீரேற்று மையத்திற்கு நிலத்தடி மின் கேபிள் அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தி வருகிறது. தற்போது, தமிழக அரசின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், மத்திய அரசிடம் பரிந்துரை செய்து விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், இதற்கான அனுமதி கிடைத்துவிடும். அதன் பின்னர், மழைக்காலங்களிலும் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இதுபோன்று மழைக்காலங்களில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டால், ஊட்டி நகரில் உள்ள கிணறுகளில் தூர்வாரி மோட்டார் பொருத்தி அதன் மூலம் தண்ணீர் வழங்குவதற்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தெரியவில்லை. எனவே, அந்த திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலைகள் சீரமைக்க பல கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலைகள் சீரமைக்கப்படுகிறது. ஆனால், கடந்த காலங்களில் சாலை சீரமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் வரை சாலையை கேபிள் பதிக்க தோண்டுவதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்பட மாட்டாது. ஆனால், தற்போது சாலை சீரமைத்தை ஒரு சில நாட்களிலேயே அந்த சாலையை தோண்டி கேபிள் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது.

இதனை தடுக்க வேண்டும். கேசினோ சந்திப்பில் இருந்து சேரிங்கிராஸ் செல்லும் கிரீன்பீல்டு சாலை வழியாக அனைத்து வாகனங்களையும் செல்ல காவல்துறை அனுமதித்துள்ளது.

ஆனால், அந்த சாலையோரங்களில் பழுதடைந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, அந்த சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும், இச்சாலையில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கக்கூடாது. அதேபோல், எட்டினஸ் சாலையிலும் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சாலையோரத்தில் உள்ள நடைபாதைகள் பயன்பாடின்றி உள்ளது. எனவே, இச்சாலையிலும் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும். மேலும், இச்சாலையில் பார்க்கி கட்டணம் வசூலித்தால், அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க முடியும். இவ்வாறு துணை தலைவர் ரவிக்குமார் பேசினார்.

ஜார்ஜ் (திமுக.,) : ஊட்டி சர்ச்ஹில் சாலையில் ரூ.6.5 லட்சம் செலவில் குழாய் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. ஆனால், அந்த பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. அந்த டெண்டர் எடுத்தவரை நீக்கி விட்டு வேறு கான்ட்ராக்டருக்கு டெண்டர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சர்ச்ஹில் பகுதியில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால், பள்ளி குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விபத்து அபாயம் தொடர்கிறது. எனவே, விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் இதனை சீரமைக்க வேண்டும்.

கேசினோ சந்திப்பு பகுதியில் கழிப்பிடம் தண்ணீர் இன்றி திறக்கப்படாமல் உள்ளது. பேன்ட் லைன் பகுதியில் ஊற்று நீர் அதிகமாக வருகிறது. அங்கு ஒரு கிணறு அமைத்து அந்த தண்ணீரை இந்த கழிப்பிடத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஊட்டி நகராட்சியில் அனைத்து கவுன்சிலர்களையும் விரோத போக்கில் பார்க்கும் பொறியாளர், எந்த ஒரு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி, பார்க்க சென்றால் பார்ப்பதில்லை.

மேலும், எந்த ஒரு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதிலும் அக்கறை காட்டி கொள்வதில்லை. சிறந்த முறையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்து வரும் ஆட்சிக்கு இவரால், ஊட்டி மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, இவரை பணி மாற்றம் செய்து, மக்களுக்காக பணி செய்யும் அதிகாரி மற்றும் அரசின் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் அதிகாரியை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முஸ்தபா (திமுக.,): எனது வார்டுக்கு உட்பட்ட எல்க்ஹில், ஓல்டு என்சிசி., மற்றும் பாம்பேகேசிலில் சில பகுதிகளுக்கு கடந்த 15 நாட்களுக்கு மேல் தண்ணீர் வரவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மழைக்காலங்கில் இப்பகுதியில் ஏற்படும் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். எப்போதும் இப்பகுதிகளுக்கு தண்ணீர் வழங்குவது போல், குறைந்தபட்சம் 4 நாளுக்கு ஒரு முறையாவது இப்பகுதிக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தம்பி இஸ்மாயில் (திமுக.,): எனது வார்டில், ஏழை எளிய மக்களை அதிகம் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் காந்தல் கால்வாயை ஒட்டியே குடியிருப்புக்களை வைத்துள்ளனர். இந்த கால்வாயில் தூர் வாரப்படாத நிலையில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கால்வாயில் தூர் வார வேண்டும்.

மேலும், ஊட்டி நகரில் அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடமாட முடியாத நிலை உள்ளது. எனவே, இவைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பிங்கர்போஸ்ட் பகுதியில் தெரு விளக்குகள் எரிவதில்லை. காந்தல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைத்தை ஒட்டியுள்ள கால்வாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அபுதாகீர் (திமுக.,): பிங்கர்போஸ்ட் பகுதியில் கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தை தனியார் யாரும் டெண்டர் எடுக்க முன் வரவில்லை. எனவே, நகராட்சி நிர்வாகம் அந்த கழிப்பிடத்தை எடுத்து முறையாக பராமரித்து நடத்த வேண்டும்.

காந்தல் பகுதியில் சோலார் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவி (திமுக.,): எல்க்ஹில் பகுதியல் சாலைேயாரங்களில் கேபிள் அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தால், சாலையில் மண் சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சாலை மற்றும் நடைபாதைகள் பழுதடைந்துள்ளன.

இதனை சீரமைக்க வேண்டும். தண்ணீர் 20 நாட்களுக்கு ஒருமுறை கூட முறையாக வருவதில்லை. எனவே, முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு விளக்குகள் அனைத்தையும் சீரமைக்க வேண்டும்.

நாகமணி (திமுக.,): கணபதி நகர் பகுதிக்கு நடைபாதை அமைக்க வேண்டும். தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பிங்கர்போஸ்ட் பகுதியில் மினி பஸ்கள் மிகவும் வேகமாக செல்கிறது. இதனால், பள்ளிக்குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது.

எனவே, வேகமாக இயக்குமு் சம்பந்தப்பட்ட மினி பஸ்கள் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ப்ரியா (திமுக.,): கஸ்தூரிபாய் காலனி பகுதியில் அங்கன்வாடி பகுதியில் கால்நடை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகளுக்கு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதனை மாற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வராஜ் (திமுக.,): நொண்டிமேடு பகுதியில் உள்ள கழிப்பிடத்தை சீரமைத்து தர வேண்டும். காந்திநகர் பகுதிக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

தனலட்சுமி (அதிமுக.,): குந்தா அவுஸ் பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும். மணி லாட்ஜ் பகுதியில் குழாய்கள் அமைக்கும் பணி பாதியிலேயே நிற்கிறது. முழுமையாக குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஜெயலட்சுமி (அதிமுக.,): ராஜீவ்காந்தி காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை அமைத்து அனைத்து குடியிருப்புகளுக்கும் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார் (அதிமுக.,): பார்சன்ஸ்வேலியில் பணியாற்றும் ஊழியர்களை தொடர்பு கொள்ளும் வகையில் வாக்கி டாக்கி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 20 ஆண்டுக்கு முன்பு பாரதியார் நகர் பகுதியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

அதன்பின், அங்கு நடைபாதை அமைக்கப்படவில்லை. இதனால், நடைபாதைகள் பழுதடைந்துள்ளது. எனவே, நடைபாதைகளை சீரமைக்க வேண்டும். தோப்லைன் பகுதியில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும்.

அக்கீம் (திமுக.,): எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் பிரச்னை உள்ளது. அதனை சீரமைக்க பெரிய குழுாய்கள் அமைக்க வேண்டும். குப்பைகளை முறையாக பிரித்து எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உமா (காங்.,): எச்பிஎப்., பகுதியில் சிறத்தை மற்றும் கரடி நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே, வன விலங்குகளின் தெல்லைகளை சமாளிக்க இப்பகுதியில் தெரு விளக்கு அமைக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்த் (காங்.,) பேசுகையில், கோடப்பமந்து கால்வாயில் குப்பைகள் கொட்டுவதால் மழைக்காலங்களில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, தடுப்புகள் அமைக்க வேண்டும். சாந்தி விஜய் பள்ளி முதல், சேரிங்கிராஸ் வரையுள்ள குழாய்களை மாற்ற வேண்டும். செல்பாண்ட் சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தை விட்டு வெளியேறிய பொறியாளர்; திடீர் பரபரப்பு

பொதுவாக நகராட்சி கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, அதனை நிறைவேற்றி தராத பட்சத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வது வாடிக்கை. ஆனால், ஊட்டி நகராட்சியில், நேற்று நடந்த கூட்டத்தில், பொறியாளர் சேகரன் முறையாக பணிகள் மேற்கொள்வதில்லை.

கவுன்சிலர்களை மிகவும் மோசமாக நடத்துவதாக கூறி அனைவரும் குற்றம்சாட்டினர். இதற்கு முறையாக பதில் அளிக்க முடியாமல், கூட்டத்தில் இருந்து பொறியாளர் சேகரன் வெளியேறினார். இதனால் திடீர் பரபரப்பு நிலவியது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi