சென்னை: செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் அண்ணா 115வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும். அதை எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம். அதற்காக நாம் பாடுபட வேண்டும். புதுச்சேரி உள்பட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களையும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டது. போர் என்ற யுத்தம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. யுத்தத்தை நாம் சந்திக்க வேண்டும். எதிரிகளை விரட்டி புறமுதுகு காட்டி ஓடும் அளவிற்கு நம் பணிகள் அமைய வேண்டும். எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெற்று விட்டது என்ற ஒலி ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அந்த லட்சியத்திற்காக நாம் அத்தனை பேரும் நம்மை அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற உழைக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் வரும் என்று நம்புகிறோம். அப்போதுதான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் ஆண்டவனாலும் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தலைமை கழக செயலாளர்களும் மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.