ஹராரே: அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 49 ஓவரில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்லி மாதேவரே 61, சிக்கந்தர் ராசா 58 ரன் எடுத்தனர். அயர்லாந்து சார்பில் மார்க் அடேர் 4, கர்டிஸ் கேம்பர் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பால்பிர்னி 11 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். பின்னர் இணைந்த பால் ஸ்டிர்லிங்-கர்டிஸ் கேம்பர் ஜோடி சிறப்பாக ஆடி, இருவரும் அரை சதமடித்து அசத்தினர். பால் ஸ்டிர்லிங் 89, கர்டிஸ் கேம்பர் 63 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், அயர்லாந்து அணி 48.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (18-ம் தேதி) நடைபெறுகிறது.