புபனேஷ்வர் : உடல்கள் அடையாளம் காணப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார். ஒடிசா ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. கோரமண்டல், ஹவுரா விரைவு ரயில்களும் சரக்கு ரயிலும் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஒடிசா ரயில் விபத்து குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா,” மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது.தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாவட்ட நிர்வாகமும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனுக்குடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. பின்னர், உடல்கள் அடையாளம் காணப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,’என்றார்.