சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் துரிதமாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றிய NDRF வீரர் வெங்கடேசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானகா பஜார் ரயில் நிலையம் அருகே, கடந்த 2ம் தேதி இரவு 7 மணி அளவில் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் மாறி, கிளைப்பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. அவை, மற்றொரு தண்டவாளத்தில் வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மீது மோதியதில் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 275 பேர் பலியாகினர். 1100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து முதன் முதலில் மீட்பு படைக்கு தகவல் தெரிவித்தவர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர் வெங்கடேசன் என்பது தெரியவந்துள்ளது. இவர் தனது வாட்ஸ் அப் மூலம் விபத்து நடந்த படங்கள் இருப்பிடத்தை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிய நிலையில், மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதன் மூலம் பல உயிர்கள் விரைந்து காப்பாற்றப்பட்டதற்கு வெங்கடேசனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
அந்த வரிசையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,”பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன் அவர்கள். உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன்,”எனத் தெரிவித்துள்ளார்.