Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரைவேக்காடு, அட்டைப்பூச்சி, ஆக்டோபஸ் அண்ணாமலை மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்: மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மதுரை: அரைவேக்காடு, அட்டைப்பூச்சி, ஆக்டோபஸ் அண்ணாமலை சிறந்த மனநல மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மதுரையில் அதிமுக ஜெ. பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வரலாறு தெரியாமல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு நேற்றைய பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அவர் உடனடியாக சிறந்த மனநல மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது அவரது பேச்சிலிருந்தே தெரிகிறது. சித்தம் கலங்கியவர்கள் பேசுவது அவர்களுக்கே புரியாது.

ஒரு கவுன்சிலராக கூட வெற்றி பெற முடியாத அரைவேக்காடு, ஆக்டோபஸ், அட்டைப்பூச்சி அண்ணாமலை வரைமுறையுடன் பேச வேண்டும். ஒன்றியத்தில் அவரது கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் முல்லைப் பெரியாறு பிரச்னை, தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ளாரா?. கல்வி, சுகாதார மேம்பாட்டுக்கு ஏதேனும் திட்டங்களை அறிவிக்க செய்துள்ளாரா? வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரவும், வறுமையை ஒழிக்கவும் ஏதேனும் பங்காற்றி உள்ளாரா?

கடந்த 52 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் சமூக நீதி காப்பதில் தொடங்கி அதிமுக பல்வேறு போராட்டங்கள் நடத்தி தீர்வு கண்டுள்ளது. இந்த வரலாறு அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிகார வெறி, பதவி மோகத்தால் சித்தபிரம்மை பிடித்தவர் போல அவர் நடப்பதால் தமிழ்நாடு மக்களுக்கு எவ்வித பிரயோஜனமும் இல்லை. தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு உங்களது பங்களிப்பு பட்டியலை வெளியிட தயாரா? மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அவரது கட்சி உள்ளது. ஆனால் மத்திய பட்ஜெட்டில் ஒரு இடத்தில் கூட தமிழ்நாட்டின் பெயர் இடம்பெறவில்லை. இதை கேட்க துப்பில்லாத, துப்புக்கெட்ட அண்ணாமலை வாய் திறக்கவில்லை. எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் பேசலாம் என்ற அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது?.

அவர் வகிப்பது நியமன பதவி. நாளை காலை அவரை பதவியில் இருந்து எடுத்துவிட்டால் அவரை சீண்ட ஆள் இல்லை. இதிலிருந்து தப்பிக்கவே வெளிநாட்டுக்கு படிக்க போவதாக அண்ணாமலை சாக்கு சொல்கிறார். நிறைகுடம் தளும்பாது. அண்ணாமலை ஒரு காலி தகர டப்பா. இந்த டப்பா எழுப்பும் சத்தத்தால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. முதல்வர் கனவில் அண்ணாமலை உள்ளார். அவரது கனவு பகல் கனவு. ஒன்றிய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அண்ணாமலை எங்களை 10 ஆண்டு அல்லது 20 ஆண்டு சிறையில் தள்ளுவாரா? எங்களை சிறையில் அடைத்தாலும் உங்கள் முகத்திரையை கிழிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.