Saturday, June 21, 2025
Home செய்திகள்Showinpage ஆபாச மெசேஜ் அனுப்பியதால் ஆத்திரம் வாலிபர் கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், நடிகை கைது: மேலும் 13 பேர் சிக்கினர்; போலீசார் தீவிர விசாரணை

ஆபாச மெசேஜ் அனுப்பியதால் ஆத்திரம் வாலிபர் கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன், நடிகை கைது: மேலும் 13 பேர் சிக்கினர்; போலீசார் தீவிர விசாரணை

by Karthik Yash

பெங்களூரு: கன்னட சினிமா நடிகர் தர்ஷன், தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ரேணுகா சுவாமியை என்ற வாலிபரை கொலை செய்த வழக்கில் 13 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு காமாட்சி பாளையம் போலீஸ் சரகத்திலுள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்று முன்தினம் ஒரு சடலம் கிடந்தது. கால்வாயில் கிடந்த சடலத்தை நாய்கள் கடித்து குதறி கொண்டிருந்த தகவல் கிடைத்ததும் காமாட்சி பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சோதனை செய்ததில் சடலத்தில் காயம் இருப்பதை பார்த்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் இறங்கினர். விசாரணையில் சடலமாக கிடந்தவர் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசுவாமி(33) என்று தெரிந்தது.

இவரை கடந்த 8ம் தேதியில் இருந்து காணவில்லை என்று சித்ரதுர்கா போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக பவன், தீபக் , ராகவேந்திரா உள்ளிட்டோர் போலீசில் சரண் அடைந்தனர். ஆஜரான நபர்களிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது ரேணுகாசுவாமி, பட்டணகெரே வாகன பார்க்கிங் மையத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார் என்பதும் இதில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவந்தது. நடிகர் தர்ஷன், கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதை அறிந்த உடனே போலீஸ் அதிகாரிகள் மைசூரு சென்று நேற்று படப்பிடிப்புக்காக ஓட்டலில் தங்கியிருந்த அவரை கைது செய்து பெங்களூரு அழைத்து வந்தனர். இது தொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பி.தயானந்த் கூறுகையில், ‘ கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

* கொலைக்கான காரணம்
நடிகர் தர்ஷனும், நடிகை பவித்ரா கவுடாவும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். வயது வித்தியாசமின்றி இவர்களுக்குள் உறவு இருந்துள்ளது. சமீபத்தில் பவித்ரா கவுடாவின் பிறந்த நாளை தர்ஷன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது அவரை கட்டி அணைத்து முத்தமழை பொழிந்தார். பின்னர் ஒன்றாக சேர்ந்து இரவு நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோவை நடிகை பவித்ரா கவுடா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இதற்கு பல்வேறு கமென்ட்களை ரசிகர்கள் பதிவு செய்து வந்தனர். நடிகர் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமியும் பவித்ரா கவுடாவை விமர்சித்து பதிவு செய்திருந்தார். அதன் பிறகு ரேணுகா சுவாமி பவித்ரா கவுடாவை ஆபாசமாக திட்டி குறுஞ்செய்திகளை அனுப்ப தொடங்கியுள்ளார். இது எல்லை மீறியதால் நடிகை பவித்ரா கவுடா தர்ஷனிடம் புகார் கூறியுள்ளார். அதன் பின்னர் தர்ஷன் அவரை கடத்தி கொண்டு வந்து துன்புறுத்தி கொலை செய்யும் அளவுக்கு சம்பவம் நடந்துள்ளது.

* 7 நாள் போலீஸ் காவல்
நடிகர் தர்ஷன், கொலை வழக்கில் சிக்கிய நிலையில் அவருக்கு பெங்களூரு பவுரிங் மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடந்தது. இந்த வழக்கில் அவருடன் கைதான 13 பேருக்கும் உடல் பரிசோதனை நடந்தது. பவுரிங் மருத்துவமனைக்கு நடிகர் தர்ஷன் அழைத்து வரப்படுகிறார் என்ற தகவலை தொடர்ந்து தர்ஷனின் ரசிகர்கள் அதிகம் குவிந்து இருந்தனர். இந்நிலையில் உடல் பரிசோதனை முடிந்த நிலையில் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட 13 பேர், 24 ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 14 நாட்கள் நடிகர் தர்ஷனிடம் விசாரணை நடத்த போலீசார் அனுமதி கேட்டனர். ஆனால், 7 நாள் விசாரணை நடத்த நீதிபதி அனுமதி அளித்தார்.

* யார் இந்த ரேணுகா சுவாமி?
கொலை செய்யப்பட்ட ரேணுகா சுவாமி , சித்ரதுர்காவை சேர்ந்தவர். கடந்த வருடம் திருமணம் நடந்த நிலையில் தற்போது அவரின் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார். ரேணுகா சுவாமி மெடிக்கல் ஷாப்பில் பணியாற்றி வந்தார். நடிகர் தர்ஷன் உத்தரவின்பேரில் அவரது ரசிகர் மன்ற தலைவர் ரகு கடந்த 8ம் தேதி இவரை கடத்தி பெங்களூரு பட்டணகெரேவுக்கு அழைத்து வந்துள்ளார். நடிகர் தர்ஷன் மற்றும் பவுன்சர்கள் சேர்ந்து அவரை அடித்து உதைத்துள்ளனர். கையில் கம்பியால் சூடு வைத்துள்ளனர். காதில் பயங்கரமாக தாக்கப்பட்டுள்ளார். அதுமட்டும் இன்றி முதுகு, கை என உடல் முழுவதும் பயங்கரமாக தாக்கப்பட்டதால் அவரின் உயிர் பிரிந்துள்ளது.

* பவித்ரா கவுடா மீது தர்ஷன் தாக்குதல்
ரேணுகா சுவாமி இறந்த உடனே நேரடியாக பவித்ரா கவுடா வீட்டிற்கு சென்ற தர்ஷன், இது எல்லாம் உன்னால் தான் நடந்துள்ளது என கூறி அவரை அடித்து உதைத்துள்ளார். நடிகர் தர்ஷன் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த பவித்ரா கவுடாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi