வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்துள்ள ‘பெரிய அழகான’ மசோதா மூலம் 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வேதனை தெரிவித்துள்ளார்.
வரி குறைப்பு நடவடிக்கைக்கு பின், நிதி ஆதாரத்தை திரட்ட, Medicaid எனப்படும் மருத்துவ உதவிக்கான நிதியை குறைக்கும் மசோதாவை ட்ரம்ப் அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவை செனட் அங்கீகரித்துள்ளது. இதனை அடுத்து சர்ச்சைக்குரிய சட்டத்தின் மீதான வாக்கெடுப்பு ஜூலை 4-ம் தேதி நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டால் 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்க நேரிடும். எனவே இன்றே உங்கள் பிரதிநிதியை அழைத்து, இந்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கச் சொல்லுங்கள் என முன்னாள் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
ஒபாமா தனது சமூக வலைதள பதிவில் கூறியதாவது:
மருத்துவ உதவிக்கான கூட்டாட்சி நிதியைக் குறைத்து, மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தும் ஒரு மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியினர் விரைந்து வருவதால், 16 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் தங்கள் சுகாதாரப் பாதுகாப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
More than 16 million Americans are at risk of losing their health care because Republicans in Congress are rushing to pass a bill that would cut federal funding for Medicaid and weaken the Affordable Care Act.
If the House passes this bill, it will increase costs and hurt…
— Barack Obama (@BarackObama) July 2, 2025
இந்த மசோதாவை அவை நிறைவேற்றினால், அது செலவுகளை அதிகரிக்கும் மற்றும் வருங்கால தலைமுறைகளுக்கு தொழிலாள வர்க்க குடும்பங்களை பாதிக்கும். இன்றே உங்கள் பிரதிநிதியை அழைத்து, இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கச் சொல்லுங்கள் என கூறியுள்ளார்.