தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ள அரசு மாதிரி தொடக்கப்பள்ளியில் 547 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டையில் முறைகேடு நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பள்ளியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டிலிருந்து உணவு எடுத்து வந்து சாப்பிட்டால் முட்டை கிடையாது எனவும், பள்ளியில் வழங்கும் சத்துணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே முட்டை வழங்கப்படும் என்றும் ஆசிரியர்கள் தெரிவிப்பதாக மாணவர்கள் கூறினர். இதையடுத்து சத்துணவு பதிவேடு புத்தகத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் மாதம் 547 முட்டைகள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக கணக்கு எழுதி இருந்தனர். முட்டை வழங்காமலே முட்டை வழங்கியதாக கணக்கு எழுதி முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிக்கையின் பேரில் தண்டராம்பட்டு அதிமுக நகர செயலாளரான, சத்துணவு அமைப்பாளர் தேவேந்திரனை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டார்.