புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபைக்கு ஒன்றிய அரசு நேரடியாக பாஜவை சேர்ந்த வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோரை எம்எல்ஏக்களாக நியமனம் செய்தது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த என்.ஆர்.காங்கிரஸ், அதிமுகவுக்கு நியமன எம்எல்ஏ வழங்கப்படவில்லை. இந்நிலையில் நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். அவர்களுக்கு பதிலாக பாஜவை சேர்ந்த செல்வம், தீப்பாய்ந்தான், காரைக்கால் ராஜசேகர் எம்எல்ஏக்களாக புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த நியமனத்தின்போது, என்.ஆர். காங்கிரசை சேர்ந்த ஒருவருக்கு ரங்கசாமி நியமன எம்எல்ஏ பதவி கேட்டதாக தகவல் வெளியானது. ஆனால் பாஜ மறுத்து விட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று முதல்வர் ரங்கசாமியிடம், நியமன எம்எல்ஏ த ரததால் பாஜ மீது தாங்கள் அதிருப்தியில் உள்ளீர்களா? என நிருபர்கள் கேட்டதற்கு, பாஜ தான் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு நியமன எம்எல்ஏக்களை நியமித்தார்கள். அவர்களே தற்போது நியமன எம்எல்ஏக்களை நீக்கிவிட்டு, மீண்டும் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு கொடுத்துள்ளனர். அதில் எங்களுக்கு எந்த அதிருப்தியும், வருத்தமும் இல்லை. அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

புதுச்சேரி மாநில பாஜ தலைவர் பதவிக்கு வி.பி.ராமலிங்கம் மனு தாக்கல் செய்திருந்தார். ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டதால் அவர் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான முறையான அறிவிப்பு செய்வதற்கான கூட்டம் சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது. இதில் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், புதுச்சேரி புதிய பாஜ தலைவராக வி.பி.ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டதையும், அவர் 2027 வரை தலைவராக செயல்படுவார் என்பதையும் அறிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் இதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. அதேபோல் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக செல்வகணபதி எம்பி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தேர்வானதையும் கூட்டத்தில் அறிவித்தார். தொடர்ந்து பாஜ தலைவருக்கு, மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, செல்வணபதி எம்பி, அமைச்சர் நமச்சிவாயம், பாஜ எம்எல்ஏக்கள் சாய்.ஜெ.சரவணன்குமார், ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஜான்குமார், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


