நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காகத் தேசிய சாதனை ஆய்வு (National Achievment Survey-NAS) தேர்வு மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு 3,5,8,10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இதன்மூலம் மாணவர்களின் கற்றல் திறன் கண்டறியப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடப்பாண்டில் மாநில கல்வி சாதனை ஆய்வு – 2023 (State Educational Achievment Survey-SEAS) தேர்வு நவம்பர் 3ம் தேதி நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் 3,6,9ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக இந்த ‘எஸ்இஏஎஸ்’ திறனறி தேர்வு பள்ளிக்கல்வித் துறையால் நவம்பர் 3ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 7.42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தேர்வு தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 3,6,9ம் வகுப்புள்ள 27,047 பள்ளிகள் மற்றும் அதில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் நியமிக்கப்படுவார்கள். இது தவிர 29,775 கள ஆய்வாளர்களை அடையாளம் கண்டு அவர்கள் மூலம் இந்த மாநில கல்விச் சாதனை ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய கள ஆய்வாளர்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனப் பயிற்சியாளர்கள், பி.எட், எம்.எட் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு இந்த ஆய்வுக்கான பயிற்சி தரப்படும். அதேபோல், வட்டார அளவிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் மொத்தம் 1,336 பேர் வட்டார ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். என அதில் கூறப்பட்டுள்ளது.