டெல்லி: டெல்லி, உத்திரபிரதேசம், உத்திரகாண்ட் மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இடையே டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. டெல்லியின் என்.சி.ஆர். மண்டல பகுதிகளான லாஜ்புத் நகர், லோதிசாலை, லுட்டியம்ஸ் டெல்லி, நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விபத்தை தவிர்ப்பதற்காக வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல உத்திரப்பிரதேசத்தில் மதுரா உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. குளம் போல தேங்கிய வெள்ளத்தில் பேருந்துகள் ஊர்ந்து சென்றன. உத்திராக்கண்ட்டிலும் கனமழை உடன் பனிப்பொழிவு நிலவுவதால் கேதார்நாத் வாக்குறுதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே வட மாநிலங்களில் 3 நாட்கள் கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.