*நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
சாத்தான்குளம் : வடக்கு அமுதுண்ணாக்குடியில் மதுபிரியர்களின் பாராக மாறி வரும் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகேயுள்ள வடக்கு அமுதுண்ணாக்குடியில் அங்கன்வாடி மையம், துவக்கப்பள்ளி அருகே அரசு சார்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் கட்டப்பட்டது. இங்கு மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்தாய்வில் ஈடுபட்டனர்.
தற்போது இந்த கட்டிடம் பழுதடைந்ததால் எந்தவித பயன்பாடும் இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இந்த கட்டிடத்தின் சுவர் மற்றும் மேற்கூரைகள் விரிசல் விழுந்த நிலையில் காணப்படுகிறது. எந்த நேரமும் இக்கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தலாம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் இக்கட்டிடத்தில் கதவுகள் உடைந்து திறந்த நிலையில் காணப்படுவதால் மது பிரியர்கள் மது அருந்தும் பாராக இக்கட்டிடத்தை மாற்றியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக்கட்டிடத்தை பார்வையிட்டு சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.