பிரயாக்ராஜ்: உ.பி மாநிலம், நிதாரியில் கடந்த 2006ம் ஆண்டு தொழிலதிபர் மொகிந்தர் சிங் பாந்தர் வீட்டின் கழிவு நீர் கால்வாயில் இருந்து 8 சிறுவர்களின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.கால்வாயை தோண்டியதில் மேலும் சில எலும்பு கூடுகள் மீட்கப்பட்டன. இது தொடர்பாக 2007ம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் 19 வழக்குகளை பதிவு செய்தனர். தொழிலதிபர் மொகிந்தர் மற்றும் அவரது உதவியாளர் சுரேந்திர கோலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாந்தர் நொய்டா சிறையிலும், கோலி காசியாபாத் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் இருவருக்கும் மரண தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. சிபிஐ தீர்ப்பை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி அஸ்வானி குமார் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஷா ரிஸ்வீ ஆகியோர் அடங்கிய இரண்டு பேர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றவாளிகள் அவர்கள்தான் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதாக கூறி, இரண்டு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.