நெய்வேலி: வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்த கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சி, பி2 பிளாக் மாற்று குடியிருப்பு 5வது தெருவில் வசித்து வந்தவர் கொளஞ்சியப்பன் (63), ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியர். இவரது மனைவி பத்மாவதி (55). கொளஞ்சியப்பன், பத்மாவதி இருவரும் ஏற்கனவே வேறொருவருடன் திருமணமாகி பிரிந்தவர்கள் ஆவார். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மறுமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் சென்னையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது கொளஞ்சியப்பன் நெய்வேலி என்எல்சி ஆர்ச்கேட் எதிரில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கொளஞ்சியப்பனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளதாக பத்மாவதிக்கு அடிக்கடி சந்தேகம் இருந்து வந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தின் முன்பு கொளஞ்சியப்பன் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் உள்ளதாக கூறி நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் பத்மாவதி புகார் அளித்துள்ளார். இதனால் கணவன், மனவைி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல நேற்றுமுன்தினமும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பத்மாவதி, இரவு வீட்டில் தூங்கிய கணவர் கொளஞ்சியப்பன் தலையில் கத்தியால் குத்தி, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் இறந்த கணவரின் உடலுடன் நேற்று காலை வரை வீட்டிலேயே இருந்துள்ளார். இதையடுத்து காலையில் தனது உறவினருக்கு போன் செய்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் உறவினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து பார்த்த போது, கொளஞ்சியப்பன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கொளஞ்சியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, பத்மாவதியை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.