சொத்துக்காக கடத்தி தலைகீழாக தொங்கவிட்டு சினிமா துணை இயக்குனரை சித்ரவதை செய்த தங்கை: பாஜ நிர்வாகியான மகன் உட்பட 5 பேர் கைது
2023-02-01@ 01:11:31

பல்லடம்: பல்லடத்தில் சொத்துக்காக சினிமா இயக்குனரை கடத்தி தலைகீழாக தொங்கவிட்டு அவரது தங்கையே சித்ரவதை செய்துள்ளார். இதுதொடர்பாக தங்கையின் மகனான பாஜ நிர்வாகி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த தெக்கலூர் பகுதியில் வசிப்பவர் சிவக்குமார் (எ) தங்கதுரை (52). சினிமா துணை இயக்குனர். இவரது தங்கை அம்பிகா பல்லடம் சேடபாளையம் பகுதியில் வசிக்கிறார். அவரது கணவர் வேலுச்சாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர்களது மகன் கோகுலகண்ணன் (25) நகர பாஜ விவசாய அணி செயலாளராக உள்ளார்.
தங்கதுரையின் பெயரில் உள்ள பூர்வீக சொத்தை தங்களுக்கு எழுதி தரும்படி அம்பிகா குடும்பத்தினர் கேட்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்குள் மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் தங்கதுரை பல்லடம் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது தங்கையும் அவரது கணவரும், பாஜ பிரமுகரான அவர்களின் மகன் கோகுலகண்ணனும் என் பெயரில் உள்ள பூர்வீக சொத்துக்களை தங்கள் பெயரில் எழுதித் தரும்படி கேட்டு வந்தனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். கடந்த 25ம் தேதி பல்லடம் சேடபாளையத்தை சேர்ந்த ஒருவர் தாராபுரம் பகுதியில் ஒரு தோட்டம் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதை பார்க்க வரும்படியும் என்னிடம் சொன்னார்.
அதன்படி நான் அங்கு சென்றபோது அங்கு இருந்த எனது மைத்துனர் வேலுச்சாமி, அவரது மகன் கோகுலகண்ணன் மற்றும் சிலர் என்னை அடித்து உதைத்து கைகளை பின்புறமாக கட்டியதோடு, வாயில் துணியை வைத்து அடைத்தனர். அதன்பின், பல்லடம் அறிவொளி நகரில் உள்ள வேலுச்சாமியின் வீட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு ஒரு அறையில் அடைத்து வைத்து மீண்டும் சொத்துக்களை எழுதி தரும்படி வற்புறுத்தி சரமாரியாக அடித்தனர். நான் மறுக்கவே தலைகீழாக கட்டி தொங்கவிட்டனர். அவர்களது சித்திரவதை தாங்கமுடியாமல் கையெழுத்து போட ஒப்புக்கொண்டேன். அதன்பின் கீழே இறக்கி கட்டை அவிழ்த்துவிட்டு 21 பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர்.
மேலும் நான் அணிந்திருந்த 5 பவுன் தங்க பிரஸ்லேட், 7 பவுன் சங்கிலி, ஒண்ணே கால் பவுன் மோதிரம், ரொக்க பணம் ரூ.1.60 லட்சம், ரேஷன் கார்டு, ஏடிஎம் கார்டு, பான் கார்டு மற்றும் சொத்து பத்திரங்கள் அனைத்தையும் பறித்துக்கொண்டனர். எனது வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி மயங்க வைத்தனர். மயக்கம் தெளிந்து எழுந்தபோது மீண்டும் மதுவை குடிக்க வைத்தனர். மறுமுறை நான் மயக்கம் தெளிந்து பார்த்தபோது பெங்களூருவில் உள்ள மனநல காப்பகத்தில் இருந்தேன்.
அங்கிருந்தபடியே எனது வளர்ப்பு தாய் வசந்தி மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் வந்து என்னை மீட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.இதையடுத்து பல்லடம் போலீசார் ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்து வேலுச்சாமி, அவரது மகனும் பாஜ பிரமுகருமான கோகுல கண்ணன் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அஸ்ரப் அலி (30), ரியாஸ்கான் (29), சாகுல் அமீது (35) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான அம்பிகாவை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பதற்கு ராமதாஸ் கண்டனம்!!
அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது: நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
தமிழ்நாட்டின் மின்தேவையை நிறைவு செய்வது என்எல்சி மின் உற்பத்தியை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வோடு அணுக வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு
கடை வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி