மது போதையில் நண்பர்கள் மோதல்; வாலிபரை ஜனநாயகன் படபாணியில் கொலை செய்து ரீல்ஸ் எடுத்த கொடூரம்: கோவையில் பரபரப்பு
கோவை: கோவை அருகே மது போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபரை ஜனநாயகன் படபாணியில் சுத்தியால் அடித்து கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் உதயம் நகரில் வசித்து வரும் சுப்பிரமணி மகன் அஸ்வின் (22). இவர் நேற்று இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமாரின் மகன் 16 வயது சிறுவன் மற்றும் சேகர் மகன் மாதேஷ் (22) ஆகியோருடன் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு சென்று மது அருந்தியுள்ளனர்.
அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். மேலும், சிறுவன் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து அஸ்வினை சுத்தியால் தலையில் அடித்து, கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்து அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தனிப்படை அமைத்து தலைமறைவான குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
கொலை செய்து ரீல்ஸ்
சமீபத்தில் தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் வெளியான ஜனநாயகன் திரைப்படத்தில் எதிரியை விஜய் சுத்தி போன்ற ஆயுதத்தால் அடித்து கொன்று விட்டு ரத்தத்தை நக்கியபடி வருவார். அது போலவே அஸ்வினை கொலை செய்த இளைஞர்களும் அஸ்வினின் உடலின் மீது ஏறி நின்று ரத்தத்தை நக்கியபடி ரீல்ஸ் எடுத்ததாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.


