டபிள்யூ.பி.எல் ஜனவரி 9ம் தேதி தொடக்கம்: தீப்தி சர்மாவை ரூ.3.20 கோடிக்கு வாங்கியது உ.பி.
டெல்லி: இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் போல் மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) போட்டி நடந்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்ரஸ் பெங்களூர், டெல்லி கேபிலட்ஸ்,உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயின்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரிமீயர் போட்டி 4வது தொடர் அடுத்தாண்டு ஜனவரி 9ம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ம் தேதி வரை நடக்கிறது. போட்டிகள் அனைத்தும் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடக்கிறது. தொடக்க போட்டி நவி மும்பையிலும், இறுதிப்போடி வதோதராவில் நடக்கிறது.
இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் நேற்று டெல்லியில் நடந்தது. ஏலப்பட்டியலில் 194 இந்தியர், 83 வெளிநாட்டவர் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்று இருந்தனர். இந்த ஏலத்தில் உலகக்கோப்பை போட்டியில் தொடர்நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி சர்மாவை ரூ.3.20 கோடிக்கும், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோனை ரூ.85 லட்சத்துக்கும், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங்கை ரூ.1.9 கோடிக்கும், இந்திய வீராங்கனை ஹர்லின் தியோலை ரூ.50 லட்சத்துக்கும், ஆஸ்திரேலியா வீராங்கனை லிட்ச்பீல்ட்டை ரூ.1.2 கோடிக்கும், இந்திய வீராங்கனை கிரண் நவ்கிரேவை ரூ.60 லட்சத்துக்கும், கிராந்தி கவுடை ரூ.50 லட்சத்துக்கும் உ.பி. வாரியர்ஸ் வாங்கியது.
உலகக்கோப்பையில் சிறப்பாக பந்து வீசிய இந்திய வீராங்கனை சரணியை ரூ.1.30 கோடிக்கும், இந்திய ஆல்ரவுண்டர் ஸ்நேக ரானாவை ரூ.50 லட்சத்துக்கும், தென் ஆப்ரிக்கா கேப்டன் லாரா வோல்வார்ட்டை ரூ.1.9 கோடிக்கும், நியூசிலாந்து வீரர் சோபி டிவைனை ரூ.2 கோடிக்கும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை சினெல்லே ஹென்றி ரூ.1.30 கோடிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது. இந்திய வீராங்கனை ராதா யாதவை ரூ.65 லட்சத்துக்கும், ஆஸ்திரேலியா வீராங்கனை ஜார்ஜியா வோல் ரூ.60 லட்சத்துக்கும், இங்கிலாந்து வீராங்கனைகள் லாரன் பெல்லை ரூ.90 லட்சத்துக்கும், லின்சி ஸ்மித்தை ரூ.30 லட்சத்துக்கும் ஆர்சிபி அணி வாங்கியது. நியூசிலாந்து ஆல்ரவுண்டர் அமெலியா கெர்ரை ரூ.3 கோடிக்கும், தென் ஆப்ரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயிலை ரூ.60 லட்சத்துக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
ஏலம் போகாத அலிசா ஹீலி
ஆஸ்திரேலியா 6 முறை உலகக்கோப்பை வென்ற அணியை வழிநடத்திய நட்சத்திர வீராங்கனை கேப்டன் அலிசா ஹீலியை யாரும் எடுக்கவில்லை. அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அவரை வாங்க எந்த அணியும் முன்வராதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல், கடந்த உலக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய தென் ஆப்ரிக்கா வீரர் டாஸ்மின் பிரிட்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கிரேஸ் ஹாரிஸ், டார்சி பிரவுன், லாரன் சீட்டில், அமண்டா-ஜேட் வெலிங்டன், அலனா கிங், நியூசிலாந்து விக்கெட் கீப்பர் இஸி கேஸ், இங்கிலாந்து வீராங்கனை அமி ஜோன்ஸ், இந்திய வீராங்கனை உமா சேத்ரி ஆகியோர் ஏலம் போகவில்லை.