தென்கொரியா விபத்தில் 179 பேர் பலியான சம்பவம்; எதற்காக இங்கு அழைத்து வந்துள்ளீர்கள்? உயிர் பிழைத்த 2 பணியாளர்கள் கேள்வி
சியோல்: தென்கொரியா விபத்தில் 179 பேர் பலியான சம்பவத்தில் உயிர் பிழைத்த 2 பணியாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் ‘எதற்காக இங்கு அழைத்து வந்துள்ளீர்கள்?’ என்று கேள்வி எழுப்பி உள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் சென்ற ஜெஜூ ஏர் நிறுவனத்தின் போயிங் விமானம் ேநற்று காலை 9 மணிக்கு தென்கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. அப்போது பறவை மோதியதால் இந்த விமானம் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 181 பயணிகளில் 179 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் இரண்டு விமானப் பணியாளர்கள் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த விமானத்தின் பின்பகுதியில் இருந்து இருவரும் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் பெண் மற்றவர் ஆண் பணியாளர் ஆவார். தற்போது இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து 32 வயதான ஆண் பணியாளர் லீ கூறுகையில், ‘என்ன நடந்தது? எதற்காக என்னை இங்கு அழைத்து வந்துள்ளீர்கள்? என்று மருத்துவர்களிடம் கேட்டார்.
மற்ெறாரு பெண் பணியாளாரான நூன் கூறுகையில், ‘என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் நினைவில் இல்லை. எனது உடல் முழுவதும் காயம் இருப்பது மட்டுமே தெரிகிறது. விமானம் தரையிறங்கிய போது நான் சீட் பெல்ட்டைக் கட்டிக்கொண்டேன். ஆனால் விமானம் தரையிறங்கிய பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. விமானம் மற்றும் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனரா?’ என்று கேட்டார். அவருக்கு விபத்தில் அனைவரும் இறந்த தகவல் தெரிவிக்கவில்லை என்று மருத்துவர்கள் கூறினர்.

