Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

620 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது 4 பிணை கைதிகளின் உடல்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பு: 2ம் கட்ட பேச்சு எப்போது?

கான்யூனிஸ்: காசாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, கைதிகள் பரிமாற்றத்தைக் குறிக்கும் வகையில், நான்கு இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் உடல்களை, செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. அதற்கு ஈடாக 620 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர்,கடந்த 2023, அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 200 பேரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர்.இதன் பின் காசா மீது 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 48,000 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த ஜனவரி மாதம் இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் அரசு பாலஸ்தீன கைதிகளையும், ஹமாஸ், இஸ்ரேலிய பிணை கைதிகளையும் விடுவிக்க ஒப்பு கொண்டனர். காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் 4 இஸ்ரேலிய பிணை கைதிகளின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் நேற்று ஒப்படைத்தது. இதை இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், 620 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. இது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் செய்யப்படும் கடைசி பரிமாற்றமாகும். ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவிக்கும் முறையை கண்டித்து பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதை இஸ்ரேல் தாமதப்படுத்தியது. போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தில், இஸ்ரேல் பிணைக்கைதிகள் 33 பேரும், பாலஸ்தீனர்கள் 2 ஆயிரம் பேரும் பரிமாறி கொள்ளப்பட்டனர். 6 வார போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் நாளை முடிகிறது.

அதிபர் டிரம்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரதிநிதி ஸ்டீவ் விட்காப் கூறுகையில்,‘‘இரண்டு தரப்பும் இரண்டாம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்’’ என்றார். இந்தநிலையில், மீதமுள்ள 59 இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தொடங்குமா அல்லது ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமா என்பது தெரியவில்லை.