வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் காலை மீண்டும் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ ஒரு நாளுக்குள் மளமளவென பரவியது. இதில் சுமார் 16சதுர மைல்கள் தூரமுள்ள மரங்கள் மற்றும் புதர்கள் தீப்பற்றி எரிந்து வருகின்றது. பலத்த காற்று காட்டுத்தீயின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ள நிலையில் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவுக்குள் தீயில் 14சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் வென்ட்சுரா மாகாணங்களில் இன்று காலை 10 மணி வரை சிவப்புக்கொடி எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலமாக தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 50 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளனர்.

