Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகர்கோவில் பூங்காவில் கட்டப்படும் கோளரங்கத்தில் அறிவியல் உபகரணங்கள் அமைக்கும் பணி தொடக்கம்

*பி.எஸ்.எல்.வி. ராக்கெட் உள்பட பல்வேறு மாதிரிகள் வந்தன

நாகர்கோவில் : நாகர்கோவில் பூங்காவில் கட்டப்பட்டு வரும் கோளரங்கத்தில் அறிவியல் உபகரணங்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவுக்கு நாள் தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

காலை, மாலை வேளைகளில் குழந்தைகளுடன் வந்து பொழுதை கழிக்கிறார்கள். இங்கு குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. மேலும் நூலகமும் செயல்படுகிறது.

இந்த பூங்காவை அறிவியல் மையமாக மாற்றும் வகையில், பூங்காவில் கோளரங்கம், நியூட்டனின் 3ம் விதி உள்ளிட்டவற்றை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அறிவியல் அரங்கம் ரூ.3.49 கோடியில் அமைக்கப்பட்டு வருகின்றது.

இதற்கான கட்டுமான பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கின. இங்கு அமைக்கப்படும் நவீன டிஜிட்டல் கோளரங்கம் 8 மீட்டர் விட்டம் கொண்ட கோள வடிவ திரையுடன் அமைகிறது. 4 கே தரத்தில் அறிவியல் மற்றும் வானவியல் தொடர்பான ஒலி, ஒளி காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இதை பார்ப்பதற்காக 40 இருக்கைகளுடன் ஏ.சி. வசதியுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

அவ்வப்போது மாநகராட்சி மேயர் மகேஷ், இந்த கோளரங்க கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

இந்த கோளரங்கத்தில் அமைக்கப்பட உள்ள அறிவியல் உபகரணங்கள் அனைத்தும் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மாதிரி கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பல உபகரணங்கள் கொண்டு வந்து அமைக்கப்பட்டுள்ளன.

அறிவியல் அரங்கமாக மாற உள்ளதால், பூங்காவில் மேலும் பல சீரமைப்பு பணிகளை மாநகராட்சி செய்ய உள்ளது. குறிப்பாக இந்திய அரசின் சின்னத்துடன் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணை புதுப்பிக்க உள்ளனர். மேலும் பூங்காவில் உடைந்த நிலையில் உள்ள பொருட்கள், இருக்கைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மேயர் உத்தரவிட்டுள்ளார்.

அழகிய செடிகள் நடவும், மர பலகையால் ஆன காட்சி டவர் புதுப்பிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்காவில் தற்போது கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. அறிவியல் மையமாக மாறும் சமயத்தில் அதிகளவில் மாணவ, மாணவிகள் வருவார்கள்.

எனவே மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி, பூங்காவில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

*அறிவியல் அரங்கம் ரூ.3.49 கோடியில் அமைக்கப்பட்டு வருகின்றது.

*டிஜிட்டல் கோளரங்கம் 8 மீட்டர் விட்டம் கொண்ட கோள வடிவ திரையுடன் அமைகிறது.

*4 கே தரத்தில் அறிவியல் மற்றும் வானவியல் தொடர்பான ஒலி, ஒளி காட்சி ஒளிபரப்பு செய்யப்படும்.

*40 இருக்கைகளுடன் ஏ.சி. வசதியுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படுகிறது.