Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெண் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு செப்.30க்குள் தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று ெசன்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் மற்றும் பொதுக்குழு தொடர்பாக முறையே வழக்கறிஞர்கள் எல்.மார்க்ரெட், சங்க தலைவர் லூயிசாள் ரமேஷ் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மார்க்ரெட், எதிர்மனுதாரர் பர்வீன் சார்பில் வழக்கறிஞர் டி.பிரசன்னா, லூயிசாள் ரமேஷ் சார்பில் வழக்கறிஞர் துளசி, அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் ஹசன் பைசல் மற்றும் எதிர் மனுதாரர்கள் எஸ்.சிவகாமி, என்.எஸ்.ரேவதி ஆகியோர் ஆஜராகினர்.

நீண்டவாதத்திற்கு பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: பெண் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு கடைசியாக கடந்த 2019 செப்டம்பரில் தேர்தல் நடைபெற்றுள்ளது. பதவிக் காலம் முடிந்தும் சுமார் நான்கரை ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் அதே சங்க நிர்வாகிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். விதிகளுக்கு முரணாக செயல்படும் பட்சத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் வரவு செலவு கணக்குகள், உறுப்பினர்கள் பட்டியல் ஆகியவற்றை சரியாக பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த சங்கங்களின் சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.

பெண் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரி மற்றும் கூடுதல் தேர்தல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சங்கத்தின் செயலாளர் சிவகாமி சங்கத்தின் அனைத்து ஆவணங்களையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலிடம் 2 வாரங்களில் ஒப்படைக்க வேண்டும். தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேவையான பாதுகாப்பை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் தர வேண்டும். தேர்தல் நடத்தியது தொடர்பாக தேர்தல் அதிகாரி அக்டோபர் 3ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.