சொன்னாரு: தமிழகத்தில் சாதாரண அரசு பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என மு.க.ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். செஞ்சாரு: ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டம் என்பது வெறும் பயண சலுகை மட்டுமல்லாமல், வேலைக்கு செல்லும் பெண்களின் பொருளாதார மற்றும் சமூக நிலையில் ஒரு பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டம் கடந்த 2021ம் ஆண்டு மே.8ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு பெண்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விடியல் பயணம் தொடங்கப்பட்டதில் இருந்து 57.81 லட்சம் பெண்கள் தினசரி பேருந்துகளில் பயணம் செய்வதாக போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. தற்போது வரை தமிழகம் முழுவதும் 7,705 மகளிர் விடியல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையை பொறுத்தவரை 1,711 பேருந்துகள் மகளிருக்காக இயக்கப்படுகின்றன. மேலும், பெண்கள் எளிதாக இந்த பேருந்துகளை அடையாளம் காணும் வகையில் இளஞ்சிவப்பு நிற பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் கூட முதல்வர் மு.க.ஸ்டாலினால் பெண்களுக்கான பிரத்யேக கட்டணமில்லா பிங்க் பஸ் சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் நகரப்பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த விடியல் பயண சேவையை மலைப்பகுதிக்கும் விரிவுப்படுத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பின்படி, நீலகிரி, கொடைக்கானல் மற்றும் வால்பாறை போன்ற மலைப்பகுதிகளில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மலைப்பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் இத்திட்டத்தின் கீழ் இலசமாக பயணிக்க கடந்த நிதியாண்டில் ரூ.88.65 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
* மாதம் ரூ.888 சேமிப்பு
தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் ஆய்வறிக்கையின் படி மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் மூலம் ஒரு பயனாளி மாதம் ஒன்றுக்கு சராசரியாக குறைந்தபட்சம் ரூ.888 முதல் அதிகபட்சமாக ரூ.2000 வரை சேமிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த தொகை வேலைக்கு செல்லும் பெண்களின் மாத வருமானத்தில் 11.4 சதவீதமாகும். இதில் சேமிக்கப்படும் பணத்தை கொண்டு குழந்தைகளின் கல்வி, சத்தான உணவு மற்றும் மருத்துவ செலவுகளுக்காக பயன்படுத்தப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
* ஆண்டுவாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரம்
நிதியாண்டு 2021-23 ரூ.4000 கோடி
நிதியாண்டு 2023-24 ரூ.2,800 கோடி
நிதியாண்டு 2024-25 ரூ.3,050 கோடி
நிதியாண்டு 2025-26 ரூ.3,600 கோடி



