விழுப்புரம்: விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த அதிமுக பூத் கமிட்டி பயிற்சி கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி, வரும் தேர்தலில் அனைவருக்கும் இலவசமாக ஒரு பெண்டாட்டி என்று கூட அறிவிப்பார்கள் என பேசியிருந்தார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சி.வி.சண்முகம் கடந்த 17ம் தேதி விசாரணைக்கு ஆஜராக மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியபோது, அவரது வழக்கறிஞர் ஆஜராகி நேரம் கேட்டிருந்தார். இந்த நிலையில் வருகிற 7ம் தேதி காலை 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகும்படி 2வது முறையாக சி.வி.சண்முகத்திற்கு மாநில மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
