திருச்சி: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்றே விடுவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தஞ்சை செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது; காவிரியில் தமிழ்நாட்டுக்கான தண்ணீரைக் கேட்டுப் பெற இந்த அரசுக்கு வக்கு இல்லை. விவசாயிகளுக்கு தவெக அரசு செய்த துரோகங்கள், பொய் வாக்குறுதிகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். தவெகவினர் மீதான பாலியல் புகார்களில் எந்த நடவடிக்கையும் இல்லை.
விவசாயிகளுக்காக திமுக போராடியதை Divert செய்ய என்னை கைது செய்துள்ளனர். நான் யாரையும் தவறாக பேசவில்லை; முழுக்க முழுக்க விவசாயத்தை பற்றியே பேசினேன். ரீல்ஸ் போட்டு திசை திருப்பும் யுக்தியை பின்பற்றுகிறது தவெக அரசு. பொய் வழக்கு போட்டு பயமுறுத்த பார்க்கிறது இந்த அரசு. 3,000 போலீசாருடன் என்னை தீவிரவாதி போல் அழைத்து சென்றனர்.
விசாரணை என்ற பெயரில் பல கேள்விகளை கேட்டார்கள். இரட்டை அர்த்தத்தில் நான் பேசவில்லை; விவசாயிகள் பிரச்சனையைத்தான் பேசினேன். நான் பேசாததை பேசியதாக கூறி என்னை மிரட்டப் பார்க்கிறார்கள், இதற்கெல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல.
எனக்கு மனைவி, மகள் இருக்கிறார்கள்; பெண்களை இழிவுபடுத்தும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை. வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம். நான் பேசியது டபுள் மீனிங் அல்ல, சிங்கிள் மீனிங்தான். நான் யாரையும் தவறாக பேசவில்லை; பெண்களை நான் அக்காவாக, தாயாக, தங்கையாக பார்க்கிறேன்" என பேசினார்.


