பட்டப்பகலில் நடுரோட்டில் காதல் மனைவி கழுத்தறுத்து கொலை: நடத்தை சந்தேகத்தால் கணவன் வெறிச்செயல்
திருமலை: காதலித்து திருமணம் செய்த மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரை கழுத்தறுத்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், என்.டி.ஆர் மாவட்டம், விஜயவாடா சூர்யாராவ்பேட்டையில் வசிப்பவர் விஜய் (28). இவர் விஜய்பவானிபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மையத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (25). அங்குள்ள மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவர் விஜய்க்கு, மனைவி சரஸ்வதியின் நடத்தையில் திடீரென சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட தகராறு காரணமாக மன வேதனை அடைந்த சரஸ்வதி, கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால் மனைவி மீது விஜய் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று மதியம் சரஸ்வதி, மருத்துவமனையில் வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது அங்கு வந்த விஜய்க்கும் சரஸ்வதிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த விஜய் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவமனை வாசலிலேயே சரஸ்வதியின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சரஸ்வதி அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய்யை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.