புதுடெல்லி: கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.சி.வீரமணி தனது வேட்புமனுவில், சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை தெரிவித்ததாக, வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் கே.சி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
மேற்கண்ட உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக கே.சி.வீரமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் நீங்கள் ஒன்றும் குற்றவாளி என்று அறிவிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில் வழக்கை கண்டு ஏன் அஞ்சுகிறீர்கள் என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
