ஏலகிரி : வாரவிடுமுறையையொட்டி நேற்று ஏலகிரிமலையில் ஏராளமான வெளிமாநில சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரிமலை `ஏழைகளின் ஊட்டி’ எனவும், `மலைகளின் இளவரசி’ எனவும் அழைக்கப்படுகிறது.
சுற்றுலாத்தலமான இங்கு அண்டை மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மலைப்பாதையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.
இதுதவிர மலையில் படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டு தலங்கள், பறவைகளின் சரணாலயங்கள், மூலிகை பண்ணைகள், மங்கலம் சுவாமிமலை ஏற்றம், தாமரைக்குளம், கதவநாச்சியம்மன் கோயில் உள்ளிட்டவை உள்ளது. விடுமுறை நாளான நேற்று அதிக எண்ணிக்கையில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஏலகிரிமலையில் திரண்டனர். குறிப்பாக படகு இல்லத்தில் நீண்டவரிசையில் காத்திருந்து படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.
இதேபோல் ஏலகிரி மலையில் ஆங்காங்கே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரியவகை பழங்கள் உள்ளிட்டவற்றை சுற்றுலா பயணிகள் வாங்கிச்சென்றனர். இதேபோல் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் குவிந்ததனர்.
இந்நிலையில் இங்குள்ள இயற்கை பூங்காவையும், திறந்தவெளி திரையரங்கையும் சீரமைத்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


