லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டு 2023ல் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது மகன்கள் சுலைமான் கான், காசிம் கான் இருவரும் தங்கள் தந்தை குற்றமற்றவர் என்றும், பொய்யான குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பேட்டி ஒளிபரப்பானால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலகும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எச்சரித்திருந்ததை ஸ்கை ஸ்போர்ட்ஸ் கண்டுகொள்ளவில்லை.
லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துடன் நடந்து வரும் 2வது டெஸ்டில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 110 ரன்னுக்கு சுருண்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தலைமை பயிற்சியாளர் சர்பராஸ் அகமது, ‘இம்ரான் மகன்கள் அளித்த பேட்டியை பார்க்கவில்லை. தொடரை புறக்கணிக்கப் போவதாக வந்த தகவல் உண்மையல்ல. நாங்கள் இங்கு விளையாடுவதற்காகவே வந்திருக்கிறோம்’ என்றார். லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 290 ரன் குவித்த நிலையில், பாகிஸ்தான் 110 ரன்னுக்கு சுருண்டது. 180 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன் எடுத்திருந்தது.



