மழைநீரில் தத்தளிக்கும் கிராமங்கள் ஆக்கிரமிப்பை அகற்றி மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
புழல்: புழல் அருகே மழைநீரில் கிராமங்கள் தத்தளிப்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி நிரந்தர மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட குமரன் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், இடம்பெயர வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.
மழைநீர் தேங்குவதற்கான முக்கிய காரணம், இப்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்கள் முற்றிலும் சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு செய்து, விற்பனை செய்து உள்ளதால் இங்கு தனியார் தொழிற்சாலைகள், குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், குமரன் நகர் பகுதிகளில் மழைநீர் தேங்குவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதேபோல், விளங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், வெள்ளநீர் வெளியேற முடியாமல் உள்ளது. குமரன் நகர் மட்டுமல்லாமல், விளாங்காடுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிக்குப்பம், தர்காஸ், நியூ ஸ்டார் சிட்டி நகர், சிங்கிலிமேடு, மல்லிமா நகர், கண்ணம்பாளையம், கோமதி அம்மன் நகர், பிரியா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதால், அங்கு வசித்து வரும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதிகளில் காலங்காலமாக இருந்து வந்த மழைநீர் கால்வாய்களை, சில சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு செய்து வீட்டு மனைகளாகவும், பெரும்பாலான இடங்களில் தொழிற்சாலை குடோன்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது’. இதனால், மழைநீர் கால்வாய்களில் செல்லாமல் வீடுகள் உள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. ஆண்டுதோறும் பெய்து வரும் வடக்கிழக்கு மழையின்போது, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், உள்ளூர் உள்ளாட்சி நிர்வாகத்தினர் கண்துடைப்புக்காக வந்து பார்த்து, ஆறுதல் கூறி சென்று விடுகின்றனர்.
ஆனால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குடோன்கள், தொழிற்சாலைகளை அகற்றாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர். இதனால்தான் மழைநீர் செல்ல வழி இல்லாமல் உள்ளது. எனவே, இதற்கு நிரந்தர தீர்வு ஆறுதல் சொல்வது, குறைகளை கேட்பது அல்ல, நிரந்தரமாக பழைய மழைநீர் கால்வாய்கள் எங்கெங்கு செல்கிறது என்று வருவாய்த் துறையின் சார்பில் ஆய்வு செய்து, அவற்றை அகற்றி முறையான கால்வாய்கள் அமைத்தால் எந்த காலத்திலும் மழைநீர் ஊருக்குள், குறிப்பாக வீடுகளுக்குள் புகாமல் இருக்கும். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகள், தகுந்த நடவடிக்கை எடுத்தால்தான் நிரந்தர தீர்வு காணப்படும்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா மீரான் கூறுகையில், ‘விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குடோன்கள், தனியார் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் தான் மழைநீர் செல்ல முடியாமல், மழைக்காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்று உள்ளது’. இது சம்பந்தப்பட்ட தமிழக அரசு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.