Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஜய்-திரிஷா குறித்து நயினார் பேட்டி சர்ச்சையான நிலையில் ராகுல்-காங். பெண் எம்.பியை இணைத்து பாஜ மாவட்ட தலைவர் ஆபாச பேச்சு: 5 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவால் தலைமறைவு

திருச்சி: விஜய்-திரிஷா குறித்து நயினார் பேட்டி சர்ச்சையான நிலையில் ராகுல்-காங். பெண் எம்.பியை இணைத்து பாஜ மாவட்ட தலைவர் ஆபாச பேசியது தொடர்பாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்ததால் தலைமறைவானார். சேலம் சீலநாயக்கன்பட்டியில் கடந்த 13ம் தேதி நடந்த தவெக கூட்டத்தில் பேசிய விஜய், ‘எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை எடப்பாடி வைத்துள்ளார். என்னைப் போல் தனியாக சொந்தமாக கட்சி ஆரம்பித்து குறைந்தபட்சம் ஒரு சதவீதம் வாக்கு வாங்கிக் காட்டும் தில் இருக்கிறதா, திராணி இருக்கிறதா’’ என்று அதிமுக-பாஜ கூட்டணியை கடுமையாக தாக்கி பேசினார்.

இதற்கு சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், ‘‘நடிகை திரிஷாவை விட்டு விஜய் வெளியே வர வேண்டும். வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்’’ என்று கருத்து தெரிவித்தார். விஜய்யுடன் திரிஷாவை சேர்த்து அவர் வைத்த விமர்சனம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒரு அரசியல் கட்சியின் மாநில தலைவர் பெண்களை பொது வெளியில் இவ்வாறு தரக்குறைவாக விமர்சிப்பதா என பெண்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

பாஜ தலைவர்களும், அதன் கூட்டணி கட்சி தலைவர்களும் நயினார் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகை திரிஷாவும், ‘‘இதுபோன்ற வெறுக்கத்தக்க கருத்தை ஒரு அரசியல் கட்சியின் தலைவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. தனிப்பட்ட வாழ்க்கையை பொது விமர்சனம் அல்லது விவாதத்திற்கு உட்படுத்தக் கூடாது. நான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இல்லை’ என்று கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து நயினார் நாகேந்திரன் வாய் தவறி வந்துவிட்ட வார்த்தை, அதற்காக மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

இந்த சர்ச்சை ஓய்வதற்குள் ராகுல் காந்தியையும், கரூர் எம்பி ஜோதமணியையும் இணைத்து ஆபாசமாக பாஜ மாவட்ட தலைவர் பேசியது வைரலாகி, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு: கரூர் மாவட்ட பாஜ சார்பில் கடந்த 10ம்தேதி கரூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அந்த கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை, ராகுல் காந்தியுடன் இணைந்து மிகவும் ஆபாசமாக பேசினார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாஜ மாவட்ட தலைவரின் பேச்சு, இரு பிரிவினருக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் இருந்தது. இந்த பேச்சு சமூக வலைதளங்களிலும் வைரலானது.

இதுதொடர்பாக கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ், டவுன் காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். அந்த புகாரில், எம்பி ஜோதிமணி குறித்தும் ராகுல் காந்தி குறித்தும் அவதூறு செய்யும் வகையில் பேசிய செந்தில்நாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின் பேரில் டவுன் போலீசார், பெண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், இரண்டு பிரிவினருக்கும் இடையே கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியது உட்பட 5 பிரிவுகளின் கீழ் செந்தில்நாதன் மீது நேற்று வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் வழக்கு பதிந்து தேடுவதை அறிந்த பாஜ மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமறைவானார்.