Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வீரபாண்டி சித்திரைத் திருவிழா நாளை முதல் துவங்குகிறது: வரும் 9ம் தேதி தேரோட்டம் நடக்கிறது

தேனி: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நாளை முதல் துவங்க உள்ளது. தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரைத் திருவிழா எட்டு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இரவு, பகல் என தொடர்ந்து நடக்கும் திருவிழாவைக் காண தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர். இத்தகைய சித்திரை திருவிழா வருகிற மே 6ம் தேதி முதல் மே 13 ம் தேதி வரை எட்டு நாட்கள் நடக்க உள்ளது. இச்சிறப்பு வாய்ந்த வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கான கம்பம் நடுதல் நிகழ்ச்சி கடந்த மாதம் 15ம் தேதி நடந்தது. இதனைத்தொடர்ந்து, முக்கொம்பு நடப்பட்ட நாள் முதல் கம்பத்தையே அம்மனாக கருதி, கம்பத்திற்கு 21 நாட்களுக்கு மாவுபூஜை நடத்தப்பட்டது.

மேலும் பக்தர்கள் முல்லையாற்றில் இருந்து புனித நீரை எடுத்து வந்து கம்பத்தில் நீரை ஊற்றி வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். மேலும், பக்தர்கள் மாவிளக்கு ஏற்றுதல், அங்கபிரதட்சனம் செய்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். நேற்று கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதனால் நேற்று கோயில் பகுதியில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. சித்திரைத் திருவிழா நாளை முதல் (மே 6ம் தேதி) தொடங்கி வருகிற மே 13ம் தேதி வரை எட்டு நாட்கள் நடக்க உள்ளது. இதில் வருகிற மே 9ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்திருவிழா நடக்க உள்ளது. அன்றைய தினம் தேனி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.