Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வடாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா கோலாகலம்

திருத்தணி: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். சிவபெருமான் நடனம் அரங்கேற்றம் செய்த ஐம்பெரும் சபைகளில் முதல் சபை ரத்தின சபை என்ற சிறப்பு பெற்றது திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில். திருத்தணி முருகன் கோயிலின் உப கோயிலாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத சுவாதி நட்சத்திரத்தில் கோயில் தீர்த்த குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கார்த்திகை மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. நேற்று காலை மூலவருக்கு விசேஷ அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை சிறப்பு மலர் அலங்காரத்தில் வண்டார்குழலி சமேத வடாரண்யேஸ்வரர் கோயில் ஆலங்காட்டீஸ்வரர் சென்றாடு தீர்த்த குளத்தில் எழுந்தருளினார்.

சிவாச்சாரியார்கள் வேத மந்திரிங்கள் மற்றும் மகா தீபாராதனை பூஜைகள் தொடர்ந்து தெப்பம் தீர்த்த குளத்தை சுற்றி மூன்று முறை வலம் வந்தனர். தெப்பத்தில் எழுந்தருளிய வடாரண்யேஸ்வரரை கண்டு தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

கோயில் தீர்த்த குளத்தை சுற்றி காத்திருந்து சாமிக்கு தீபாராதனை பூஜைகள் செய்து சிவசிவா... என்ற பக்தி பரவசத்துடன் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனம் செய்து வழிபட்டனர். திருத்தணி முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சு. ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி ஆகியோர் தலைமையில் அறங்காவலர்கள் உஷா ரவி, கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன், ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.