Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமெரிக்கா கொள்கை முடிவு இந்தியாவுடன் பாதுகாப்பு உறவு விரிவுபடுத்தப்படும்

வாஷிங்டன்: குவாட் உள்ளிட்ட அமைப்புகளின் மூலம் இந்தியாவுடனான பாதுகாப்பு உறவை விரிவுபடுத்த அமெரிக்கா விரும்புவதாக அதன் வருடாந்திர பாதுகாப்பு கொள்கை மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் பாதுகாப்பு கொள்கையை வரையறுக்கக் கூடிய தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் ஆண்டுதோறும் வெளியிடப்படும். அதன்படி, 2026ம் நிதியாண்டிற்கான தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் அமெரிக்க எம்பிக்களால் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவுடனான பாதுகாப்பு ஈடுபாட்டை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனா உடனான போட்டியில் அமெரிக்காவின் நன்மையை மேலும் அதிகரிக்க, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க பாதுகாப்பு கூட்டு நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுடன் விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு வர்த்தகம், மனிதாபிமான உதவி, பேரிடர் உதவி ஒத்துழைப்பு மூலம் சுதந்திரமான, திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நோக்கத்தை முன்னேற்ற வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

மேலும், குவாட் அமைப்பு மூலம் இந்தியாவுடன் கடல்சார் பாதுகாப்பில் அதிக ஒத்துழைப்பை செயல்படுத்துவம் இதில் அடங்கும். இந்தியா, அமெரிக்காவின் கூட்டாளி நாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துடன் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் இணைந்து பெங்களூருவில் சி-130ஜே சரக்கு போக்குவரத்து விமானத்திற்கான புதிய பராமரிப்பு, பழுது மற்றும் சரிபார்ப்பு ஆலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவன உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்திய விமானப்படை தற்போது 12 சி-130ஜே விமானங்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.