Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி விடுவிக்கப்படாது: நாடாளுமன்றத்தில் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு

புதுடெல்லி: பி.எம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடாததால் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்க மாநிலங்களுக்கு சமக்ர சிக்‌ஷா அபியான், தேசிய கல்விக்கொள்கை, பிஎம் ஸ்ரீ உள்பட பள்ளிக்கல்வித்துறை திட்டங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. மாநிலங்களவையில் நேற்று இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் கூறியதாவது:

தமிழ்நாடு, கேரளாவில் சில ஒன்றிய அரசின் கல்வி திட்டங்களை செயல்படுத்தவில்லை. அதனால்தான் அவற்றுக்கான நிதி நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் இந்த திட்டத்தின் கீழ் நிதியை தங்கள் கட்சி அரசியலுக்காகப் பயன்படுத்தியதால் நிறுத்தப்பட்டுள்ளது. சமக்ர சிக்ஷா அபியான், தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிரதமர்-ஸ்ரீ திட்டம் அனைத்தும் மாநிலங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் கொள்கைகள். ஒரு கட்டத்தில், கேரள அரசு பிரதமர்-ஸ்ரீ திட்டத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டது. ஆனால் பின்னர் அதை திரும்பப் பெற்றது. தமிழ்நாடு அரசும் ஒரு கட்டத்தில் பிரதமர்-ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டது. ஆனால் பின்னர் அது தனது வார்த்தைகளில் இருந்து பின்வாங்கியது. இது அவர்களின் பிரச்சனை. கூட்டணியில் உள்ள உள் முரண்பாடுகள் காரணமாக அவர்கள் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். அதனால்தான் அவர்கள் பிரதமர் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தவில்லை.

பிரதமர் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த இரண்டு மாநிலங்கள் மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை. அதில் தமிழ்நாடும் அடங்கும். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டுடன் எங்கள் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஒன்றிய அரசின் திட்டத்தில் சேரும் எந்த மாநிலத்துடனும் நான் திறந்த மனதுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன். ஒன்றிய அரசின் திட்டங்களை அமல்படுத்தினால் தமிழ்நாடு, கேரளா அல்லது மேற்கு வங்கம் எதுவாக இருந்தாலும், ஒன்றிய அரசு நிதியை விடுவிக்கத் தயாராக உள்ளது. ஒன்றிய அரசு சார்பில் செயல்படுத்தப்படும் பள்ளிகள் மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயாவை தமிழ்நாட்டில் திறக்க தமிழ்நாடு அரசு நிபந்தனைகளை விதிக்க முடியாது.

இது தமிழ்நாடு குழந்தைகளின் பணம். பிரதமர் மோடி அந்தந்த மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் அந்தப் பணத்தை வழங்க உறுதிபூண்டுள்ளார். ஆனால், நீங்கள் ஒன்றிய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். கர்நாடகா, இமாச்சல், பஞ்சாப், தெலுங்கானா போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இந்த திட்டங்களை நிறைவேற்றி உரிய முறையில் நிதியைப் பெறுகின்றன. கேரளாவிற்கு இந்த ஆண்டு சுமார் ரூ.452 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அனைத்து பணத்தையும் விடுவிக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் கூட்டணி பிரச்னையில் திட்டங்களை செயல்படுத்தாமல் நிதியை பெறவில்லை. நீங்கள் ஏன் அந்தச் சுமையை கேரள மக்கள் மீது சுமத்துகிறீர்கள். அதை நீங்களே தீர்த்துக்கொண்டு உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உங்கள் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியா? கேரள எம்பி ஆவேசம்:

கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் மாநிலங்களவை எம்பி ஜான் பிரிட்டாஸ் பேசுகையில், ’இந்த சபையின் முக்கிய நோக்கம் கூட்டாட்சியைப் பாதுகாப்பது ஆகும். ஆனால் திடீரென, மாநிலங்கள் பிரதமர்-ஸ்ரீயில் கையெழுத்திடாவிட்டால், சமக்ர சிக்‌ஷா திட்டத்தில் மாநிலங்களுக்கு நிதியை விடுவிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை ஒன்றிய கல்வி அமைச்சர் எடுத்திருப்பது ஏன்? எந்த அரசாங்கமும் இதுபோன்ற ஒரு சீரற்ற நிலைப்பாட்டை எடுத்ததை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இது நிதியை விடுவிக்க மறுப்பதன் மூலம் மாநிலங்களை ஒடுக்கும் ஒரு பகுதியா அல்லது இது உங்கள் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியா?. சமக்ர சிக்ஷா திட்டத்துடன் பிரதமர்-ஸ்ரீயின் தொடர்பைத் துண்டிக்க வேண்டும்’ என்றார். அப்போது தர்மேந்திரபிரதான்,’ ஜான் பிரிட்டாஸ் தனது அற்புதமான பேச்சுத்திறன் மூலம் அவையை தவறாக நடத்த முயற்சிக்கிறார். இது ஒன்றிய அரசின் ஒரு பாரபட்சமான கொள்கை அல்ல. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து ஒன்றிய நிதியுதவி பெற்ற சமக்ர சிக்ஷா திட்டத்தை செயல்படுத்துகிறது’ என்றார்.