Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை உயர்நீதிமன்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்ற ஒன்றிய அரசு பரிசீலனை

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்ற ஒன்றிய அரசு பரிசீலனையில் உள்ளது: மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதில் அளித்துள்ளார். சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. அதேவேளையில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்றம் செய்வது பரிசீலனையில் உள்ளது என்று ராஜ்யசபாவில் அதிமுக எம்பி தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று ராஜ்யசபாவில் அதிமுக எம்பி தம்பிதுரை பேசினார். அப்போது அவர், ‛‛தென்மாநிலங்களில் இருந்து ஏராளமான கோரிக்கைகள் உள்ளன. உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்கள் கோரிக்கையாக இருக்கிறது. நாங்கள் அதனை கோரிக்கையாக வைக்கிறோம். சென்னையில் உச்சநீதிமன்ற கிளையை அமைக்க பரிசீலனை செய்யப்படுமா?

அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்ற பெயர் மாற்றத்துக்கான தீர்மானம் தான் அது. இந்த 2 விஷயங்கள் பற்றி பதில் அளிக்க வேண்டும்'' என்று கோரினார். இதற்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுந்து பதிலளித்தார்.

அப்போது அவர், ‛‛உச்சநீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. இது உச்சநீதிமன்றத்துக்கும் சென்றது. ஆனால் உச்சநீதிமன்றம் தற்போது புதிய கிளைகள் தேவையில்லை என்று கூறி அந்த மேட்டரை செட்டில் செய்து வைத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்றம் செய்வது அமைச்சரவையின் பரிசீலனையில் உள்ளது''

இதன்மூலம் சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளை அமைக்கப்பட இ்ப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதியாக தெரிவித்துள்ளார். அதேவேளையில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயரை மாற்றுவது பற்றி பரிசீலனைக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.