Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டை புறக்கணித்த ஒன்றிய பட்ஜெட் பாஜ, அதிமுகவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளதால் பாஜ மற்றும் அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுகவுக்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள், என்று செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பேட்டியில் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், படப்பையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் `உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு, 1,654 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளதால், தமிழக மக்கள் தங்கள் பக்கம் திரும்ப மாட்டார்கள் என்பதை ஒன்றிய அரசு தெளிவாக உணர்ந்துள்ளது. அதனாலேயே, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்தவித அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக பாஜ தலைமையிலான மோடி அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருவதுடன், தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணித்து செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என்பதையே ஒன்றிய அரசு மறந்துவிட்டது. ஒன்றிய பட்ஜெட்டில் என்ன அறிவிப்பு வெளியிட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் பாஜவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காகவே, தமிழ்நாட்டை முழுவதுமாக நிராகரித்துள்ளது.

இதனை, தமிழக மக்களிடம் கொண்டு சேர்ப்போம். வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜ மற்றும் அதிமுகவுக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். கூட்டணி பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருகிறது. கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்வது தொடர்பான முடிவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் எடுப்பார். முதல்வரே விசில் சின்னத்திற்கு தான் ஓட்டு போடுவார் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளது, கற்பனைக்கு எட்டாத அளவில் உள்ளது. அதற்கு நான் என்ன சொல்ல முடியும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.