ஸ்ரீநகர்: டெல்லி கார் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட உமர் நபியின் வீட்டை பாதுகாப்பு படையினர் இடித்து தரை மட்டமாக்கினர். டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10ம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில், அருகில் இருந்த பல வாகனங்கள் தீப்பிடித்து 13 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவத்தை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என சந்தேகிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் டி.என்.ஏ. பரிசோதனையில் அவர் தான் என உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே டெல்லியில் நடந்ததை போல கார் வெடிப்புச் சம்பவத்தை 4 இடங்களில் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததை போலீசார் கண்டறிந்து உள்ளனர். இதற்காக உமர் முகமது, முசமில் ஷகீல், ஷாகீத் ஷாகீன் மற்றும் அதீல் அகமது ராதர் ஆகியோர் ரூ.20 லட்சம் நிதி திரட்டி உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் உமர் நபியில் சொந்த கிராமத்தில் உள்ள அவரது வீட்டைப் பாதுகாப்புப் படையினர் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். இதற்கு முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு தொடர்புடையவர்களின் வீடுகளையும் பாதுகாப்புப் படையினர் இடித்துத் தரைமட்டமாக்கியது குறிப்பிடத்தக்கது.
