ஆலந்தூர்: சென்னை மாநகராட்சியின் பெருங்குடி 14வது மண்டலம், உள்ளகரம் 185வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக, சாலைகளில் அமைக்கப்பட்ட சாக்கடையின் மேல்மூடிகள் முறையாக அமைக்கப்படாமல், சாலை மட்டத்தைவிட குறைவான உயரத்தில் இறக்கி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சாலைகளில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக உள்ளகரம், குபேர முனுசாமி தெரு, உஷா நகரின் 2, 3வது தெருக்கள், என்.எஸ்.சி போஸ் சாலை, சபாபதி தெரு, நியூ காலனி, ஜான் கென்னடி தெரு உள்பட பல்வேறு தெருக்களிலும் சாலையைவிட உயரம் குறைவான நிலையில் பாதாள சாக்கடையின் மேல்மூடிகளால் அதிகளவு வாகன விபத்துகள் நடக்கிறது. இதில் பள்ளி மாணவர்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மண்டல மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மாநகராட்சி வார்டு கவுன்சிலர் ஷர்மிளா திவாகர் கூறுகையில், 185வது வார்டு பகுதியான உள்ளகரம் பகுதியில் சாலையைவிட உயரம் குறைவான நிலையில் பாதாள சாக்கடையின் மேல்மூடிகளை விரைவில் உயர்த்தி அமைத்து தரும்படி மாநகராட்சி மண்டல குழு கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தி பேசியும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்றார்.எனனவே, குடிநீர் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.



