Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது: கனிமொழி எம்.பி, எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து கனிமொழி எம்.பி, எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது. நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம் என்று கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் மீது மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கை ஜனநாயக உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். உச்சக்கட்ட அடக்குமுறையும், அரசியல் பழிவாங்கும் போக்கும் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே கேள்விக்குறியாக்குகின்றன.

ஆளுங்கட்சியை எதிர்த்துப் பேசுவோர் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுவது ஆட்சியின் பலத்தை காட்டுவதல்ல; மாறாக, அதன் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது. எதிர்க்கட்சியின் குரலை வழக்குகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் ஒடுக்க முயல்வது ஜனநாயக மரபுகளுக்கும், அரசியல் நாகரிகத்திற்கும் முற்றிலும் எதிரானது. இது ஒரு தலைவருக்கு எதிரான நடவடிக்கை அல்ல; தமிழ்நாட்டின் உரிமைக் குரலுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் என்று ஏம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கண்டனம் கண்டனம் தெரிவித்துள்ளார்.