சென்னை: அதிமுகவில் பிரிந்துள்ள அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்க வேண்டும் என்ற வழக்கில், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பெற வேண்டும் என நாங்கள் வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இரட்டை இலை சின்னம் தொண்டர்கள் கரங்களில் வந்து சேரும். அதிமுகவுக்கு வந்த சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றியவர் ஜெயலலிதா. அவரின் தியாகத்தை போற்றும் வகையில், உச்சபட்ச அங்கீகாரமாக அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று அவருக்கு அங்கீகாரம் வழங்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், போலியான பொதுக்குழு ஒன்றை கூட்டி, ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயலாளர் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளனர்.
இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை, கடந்த தேர்தலில் அவர்கள் கண்ட தோல்வியே சாட்சி. அதிமுகவில் பிரிந்துள்ள அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்தால்தான், தேர்தலை சந்தித்து வெற்றி பெற முடியும் என்று தொண்டர்கள், மக்களும் எண்ணுகிறார்கள். அதேதான் நாங்கள் சொல்லி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

