Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சுனாமி, புயலில் இருந்து மக்களை காப்பாற்றியது: இயற்கையின் கொடை முத்துப்பேட்டை ‘அலையாத்திக்காடு’

இயற்கை அன்னை தன் அழகை கொட்டித் தீர்த்து ஆனந்தம் அடைந்ததோ என எண்ணும் அளவுக்கு முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் பரந்து விரிந்துள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே சுமார் 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பச்சை போர்வை போர்த்தியதை போல் பரந்து விரிந்து காணப்படுகிறது அலையாத்திக்காடு. இது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரியதாகும்.

2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது முதன் முதலில் தமிழகத்தை தாக்கிய பகுதி முத்துப்பேட்டை. இந்த அலையாத்தி காட்டால் சுனாமியின் அலை தடுக்கப்பட்டு இப்பகுதி மக்களை காப்பாற்றியது. இதேபோல் டெல்டா மாவட்டங்களை சின்னாப்பின்னமாக்கிய கஜா புயலில் இருந்தும் இப்பகுதி மக்களை காப்பாற்றிய காடு. இங்கு அலையாத்தி, நரிகண்டல், கருங்கண்டல், நீர்முள்ளி, தீப்பரத்தை மற்றும் சுரபுன்னை போன்ற சதுப்பு நிலத்தாவரங்கள் காணப்படுகின்றன.

இவற்றில் அலையாத்தி மரம் முதன்மையான தாவரமாகும். முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் மூன்று பெரும் பிரிவுகளாக காணப்படுகின்றன. தொடக்க பகுதியில் தில்லை மரங்களும், நடுப்பகுதியில் நரிகண்டல் மரங்களும், இறுதியாக அலையாத்தி மரங்களும் உள்ளன. நன்கு வளர்ந்த உயரமான அலையாத்தி மரங்கள் இப்பகுதியில் அதிகமாக உள்ளன. லகூனுக்கு ஒவ்வொரு ஆண்டின் அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரை பூநாரை, கூளக்கடா, நீர்காகம், ஊசிவால் வாத்து, குளத்து கொக்கு என பல்வேறு வகை நீர்ப்பறவைகள் வருகின்றன. 147 சிற்றின வகை பறவைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் முதன் முதலாக முத்துப்பேட்டை பகுதியில் மட்டும்தான் அலையாத்தி காடுகளுக்கு உள்ளே சென்று பார்ப்பதற்கு ஏற்ற வகையில் மரம் நடைபாதைகள், உயர் கோபுரங்கள், ஓய்வு குடில்கள் அமைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் எந்தவித அச்சமும் இன்றி பயணம் செய்யலாம். அலையாத்தி காடுகள் சென்று வந்து முத்துப்பேட்டை மண்ணில் கால் வைத்ததும் அலையாத்தி காடுகள் இவ்வளவு அழகானதா என்பதை உணர்த்தும். அலையாத்திகாட்டுக்கு ஆற்றின் வழியே படகில் நெடுந்தூர பயணம் மனதை சொக்க வைக்கும். இயற்கை அழகு மெய்மறக்க வைக்கும். லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகள் நம்மை பிரமிக்கவைக்கும். ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கீச்சு... கீச்சு...சத்தம் ரசிக்க வைக்கும்.

இப்படி ஆற்றின் வழிப்பயணமாக கடலுக்கு செல்வதும் ஒரு ஆனந்தம்தான். அந்தவகையில் இந்த அலையாத்திக்காடு உலக அதிசயங்களின் ஒன்று என கூறத்தோன்றும். இந்த அலையாத்திகாட்டை பெரியவர்களை விட இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிகளவில் ரசிக்கின்றனர். மேலும் காட்டின் ஒவ்வொரு பகுதியையும் விதவிதமாக தங்களது செல்போனில் படம் பிடித்தும், வீடியோ எடுத்தும் ரீல்ஸ் போட்டு பதிவு செய்வதுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அதிக லைக், அதிக பார்வையாளர்கள் பெற்று வருகின்றனர். அதனால் தினம் தினம் இளைஞர்கள், பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. இப்போது கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகளின் வருகை

அதிகரித்துள்ளது.

உலகத்தரத்திற்கு மாற்றும் பணிகள்விரைவில் துவக்கம்

அலையாத்திக்காட்டை உலக தரத்தில் கொண்டு வர கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா மேம்பாட்டு நிதியிலிருந்து ₹4கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. இதன் மூலம் இந்த ஆசியாவின் மிகப்பெரிய முத்துப்பேட்டை அலையாத்திக்காடு உலகத்தரத்திற்கு மின்ன இருக்கிறது. இதனால் இந்த பகுதியும் வளர்ச்சி அடையும் என்பது இப்பகுதி மக்களின், வியாபாரிகளின் கருத்தாக உள்ளது.

சினிமா சூட்டிங் தளம்

இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருப்பதால் திரைப்படம் சூட்டிங் எடுக்க பல இயக்குநர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ெஜயம் ரவி நடித்த பேராண்மை படத்தின் ெபரும் பகுதி இங்கு தான் படமாக்கப்பட்டது. மாணவி நீரில் மூழ்குவது, வெளிநாட்டினருடன் சண்டை உள்ளிட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

பிரபாகரனுக்கு பிடித்த காடு

ராஜிவ்காந்தி கொலைக்கு முன் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் நடமாட்டம் இருந்த காலத்தில் இந்த காடு மீது ஆர்வம் கொண்ட பிரபாகரன் இங்கு வந்து அடிக்கடி ஓய்வு எடுத்து செல்வது வழக்கம். இங்கிருந்து இலங்கைக்கு ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம்.

அதிசய வேரான அலையாத்தி வேர்

பொதுவாக மரங்களின் வேர் பூமிக்கு அடியில்தான் செல்லும். ஆனால் அலையாத்தி காடுகளில் வேர்கள் பூமியில் இருந்து வானத்தை நோக்கி வந்திருப்பதை காணமுடியும். இதன் மூலம் உப்பு மற்றும் கெடுதல் காற்றுகளை உறிஞ்சி நல்ல காற்றாக மாற்றி அனுப்பும் ஒரு அதிசய வேராக அலையாத்தி வேர் உள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உப்பு படிமண் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நிலத்தடி நீரும் பெரும் அளவில் பாதிக்கவில்லை.

அலையாத்திக்காடுகளால் ஜப்பானில் மழை

முத்துப்பேட்டை பகுதியில் உள்ள இந்த அலையாத்திக்காடு இப்பகுதிக்கு இயற்கை அரணாக இருப்பது மட்டுமின்றி இந்த மரங்கள் மூலம் கிடைக்கும் பருவநிலை தாக்கம் ஜப்பான் போன்ற நாடுகளில் இயற்கை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்து வருவதாக கடந்த 20 வருடங்களுக்கு முன் டெல்லியில் உள்ள எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த அலையாத்திக்காட்டுக்கு நேரில் வந்து ஆய்வு செய்து கண்டுபிடித்தனர். இதனால் இந்த காட்டை மேலும் வளர்க்கவும், பாதுகாக்கவும் ஜப்பான் அரசு நிதி உதவி செய்ய முன் வந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.