டிரம்ப் விமானத்தை நெருங்கிய பயணிகள் விமானத்தால் நடுவானில் திக்திக்...
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறை பயணமாக வாஷிங்டனில் இருந்து பிரிட்டன் புறப்பட்டார். அவருடைய மனைவி மெலனியா டிரம்பும் சென்றார். இருவருக்கும் பிரிட்டனில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிலையில்தான் பிரிட்டனுக்கு டிரம்ப் பயணித்தபோது வானில் பறந்த அவரது ஏர்போர்ஸ் ஒன் விமானமும், இன்னொரு விமானமும் நெருக்கமாக பறந்த தகவல் வெளியானது.
இந்த விமானம் லாங்க் ஐலேண்டுக்கு மேலே பறந்தபோது, அந்த விமானத்துக்கு இணையாக இன்னொரு விமானமும் பறந்து வந்தது. ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஸ்பிரிட் விமானம் 1,300 என்பது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் போர்ட் லாடர்டெல் பகுதியில் இருந்து பாஸ்டனுக்கு பறந்து சென்றது. இதனால் சுதாரித்த நியூயார்க் டவர் விமான கட்டுப்பாட்டு மையம் உடனடியாக ஸ்பிரிட் 1,300 விமானத்தின் விமானிகளை தொடர்பு கொண்டு, ‘20 டிகிரி கோணத்தில் வலதுபுரம் திரும்புங்கள்’ என்று தகவல் அளித்தது. ஆனால் பைலட்டுகள் உடனடியாக பதிலளிக்கவில்லை.
கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களுக்கு பதற்றம் அதிகரித்தது. மீண்டும் கூறியபோதும் கேட்கவில்லை. காட்டமாக திட்டியும் கேட்கவில்லை. இருப்பினும் இரு விமானங்களுக்கும் இடையே அதிகப்படியான மைல் இடைவெளி இருந்ததால் எந்த விபத்துகளும் ஏற்படவில்லை. இரு விமானங்களும் பத்திரமாக தரையிறங்கியது. ஆனாலும் இந்த சம்பவம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்களை ஆத்திரமடைய செய்தது. இந்த டென்ஷனுக்கு முக்கிய காரணம் உள்ளது.
இதுதொடர்பாக பிளைட்டிரேடர்24 எனும் விமான கண்காணிப்பு தளம் வெளியிட்ட தரவின்படி பார்த்தால், ஸ்பிரிட் ஏர்பஸ் மற்றும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானங்கள் 8 முதல் 11 மைல் தொலைவில் வானில் இணையாக பறந்தன. ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாக பாதுகாப்பு அம்சங்களின்படி பார்த்தால் நியூயார்க் வான்வெளியில் இந்த விமானங்கள் இடையே இன்னும் 1.5 மைல் மற்றும் 500 அடி செங்குத்தான வகையில் இருந்திருக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், நாங்கள் எப்போதும் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம். ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானம் 1,300 செல்லும் வழியில் வழக்கமான நடைமுறை மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைகளை பின்பற்றி தரையிறங்கியது’ என்று தெரிவிக்கப்பட்டது.