திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை துவக்கம்
திருச்சி: திருச்சியில் இருந்து ஐதராபாத் வழியாக டெல்லிக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் டெல்லி செல்பவர்கள் நீண்ட நேரம் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் புதுடெல்லிக்கு நேரடி விமானம் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று முதல் திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையை இன்டிகோ நிறுவனம் தொடங்கியது. இந்த விமானம் காலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு டெல்லியை சென்றடைந்தது. இந்த விமானம் மீண்டும் டெல்லியில் இருந்து மதியம் 2.10 மணிக்கு புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் திருச்சியில் இருந்து டெல்லிக்கு ரூ.6,785 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி-டெல்லி விமான சேவை தினசரி சேவையாக இயக்கப்பட உள்ளது.