போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் இரவு நேரங்களில் தூய்மை பணியை அலுவலர்கள் தீவிரப்படுத்த வேண்டும்: மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தல்
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், இரவு நேரங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு, மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் முதல் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை, முடிச்சூர், தாம்பரம் மார்க்கெட் பகுதிகள், திருநீர்மலை சாலைகள் மற்றும் பம்மல் பேருந்து சாலைகளில் நாள்தோறும் சுமார் 40 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் பல்வேறு வகையான வாகனங்களை கொண்டு குப்பைகளை கையாளும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக தற்போது, பேருந்து சாலைகளில், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இரவு நேரங்களில் தூய்மை பணிகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், மாநகராட்சியில் இரவு நேரங்களில் பெருங்களத்தூர் முதல் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை, முடிச்சூர், தாம்பரம் மார்க்கெட் பகுதிகள், திருநீர்மலை சாலைகள் மற்றும் பம்மல் பேருந்து சாலைகளில் 5 நான்கு சக்கர வாகனங்கள், 3 டிப்பர் லாரிகள், 2 காம்பாக்டர் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், 60 தூய்மை பணியாளர்கள் மூலம் இரவு நேர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை தீவிரப்படுத்த மாநகராட்சியின் அலுவலர்களை நியமித்து, இப்பணிகளை கண்காணித்து, மேலும் துரிதப்படுத்த தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களின் வருகை, குப்பைகள் சேகரிக்கும் நான்கு சக்கர வாகனங்கள், டிப்பர் லாரிகள் மற்றும் கம்பாக்டர் பயன்பாட்டு எண்ணிக்கையினை உறுதி செய்திடவும், சாலைகள் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்திடவும் அனைத்து தூய்மை பணிகளையும் இரவு நேரங்களிலேயே முடித்து, பொதுமக்களின் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி பணிகளை நிறைவேற்றவும் அலுவலர்களுக்கு, மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


